உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: சிவாஜி பட கிளைமாக்சை மாற்றிய எம்ஜிஆர்

பிளாஷ்பேக்: சிவாஜி பட கிளைமாக்சை மாற்றிய எம்ஜிஆர்


முன்னணி வில்லன் நடிகராக இருந்த பி.எஸ்.வீரப்பா தயாரித்த படம் 'ஆலயமணி'. அவரது தயாரிப்பில் முக்கியமான படம், பெரும் வசூலை கொடுத்து அவரை பொருளாதார ரீதியாக உச்சம் தொட வைத்த படம். சிவாஜி கணேசனுடன், சரோஜாதேவி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், சி.ஆர்.விஜயகுமாரி, வீரப்பா, எம்.ஆர்.ராதா உட்பட பலர் நடித்திருந்தனர். .

ஜி.பாலசுப்ரமணியத்தின் மூலக்கதைக்கு, திரைக்கதை வசனம் எழுதியது ஜாவர் சீதாராமன். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். பாடல்களுக்காகவே படத்தை மக்கள் திரும்பத் திரும்ப பார்த்தார்கள்.

பணக்கார சிவாஜியும் ஏழை எஸ்.எஸ். ஆரும் நண்பர்கள். இருவரும் சரோஜா தேவியை விரும்புகிறார்கள். சரோஜாதேவி எஸ்.எஸ். ஆரை விரும்புகிறார். ஒரு கட்டத்தில் சிவாஜியை திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை வருகிறது சரோஜாதேவிக்கு. அதற்கு பிறகு நடப்பதுதான் ஆலயமணியின் கதை.

சிவாஜியை திருமணம் செய்து கொண்டாலும், காதலித்த எஸ்.எஸ்.ராஜேந்திரனை மறக்க முடியாமல் தவிப்பார் சரோஜாதேவி. நண்பன் காதலியை திருமணம் செய்து கொண்டோமோ என்று சிவாஜியும் தவிப்பார். இதனால் இருவரும் மன அழுத்தத்தால் இறந்து விடுவதாக கதை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் சிவாஜி இறந்து போவதை ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் அந்த கிளைமாக்ஸ் மாற்றப்பட்டது.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கிளைமாக்சை மாற்றச் சொன்னது எம்ஜிஆர். படம் வெளியான அன்று இயக்குநர் சங்கருக்கு போன் செய்து ஆலயமணி அசத்தலாக இருக்கிறது. கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் என்று இயக்குனர் கே.சங்கருக்கு முதல் வாழ்த்து சொன்னதும் எம்ஜிஆர்தான்.

இந்தப் படம் தெலுங்கில் 'குடி கண்டலு' என்ற பெயரில் என்.டி.ஆர் நடிப்பிலும் இந்தியில் 'ஆத்மி' என்ற பெயரில் திலீப்குமார் நடிப்பிலும் ரீமேக் ஆனது. இந்தியில் பீம்சிங் இயக்கியிருந்தார். தமிழில் பிளாக் அண்ட் ஒயிட் படமாக உருவான இதை, இந்தியில் வண்ணப்படமாக எடுத்தார் பி.எஸ்.வீரப்பா. ஆனால், இந்தியில் இந்தப் படம் பெரிய வெற்றியை பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !