டில்லிக்கு தண்ணீர் தர மறுக்கும் ஹரியானா அரசு: ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு
டில்லிக்கு தண்ணீர் தர மறுக்கும் ஹரியானா அரசு: ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு
UPDATED : ஜூன் 24, 2024 04:08 PM
ADDED : ஜூன் 23, 2024 04:15 PM

புதுடில்லி: டில்லிக்கு தண்ணீர் கொடுக்காமல், அணையின் அனைத்து மதகுகளையும் ஹரியானா அரசு மூடியுள்ளது என ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
டில்லியில், வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைக்க, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த டில்லி நீர்வளத் துறை அமைச்சர் ஆதிஷி ஈடுபட்டுள்ளார். 3வது நாளான இன்று(ஜூன் 23) எக்ஸ் சமூகவலைதளத்தில் அதிஷி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் டில்லி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். ஹத்னிகுண்ட் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பியுள்ளது. ஆனால் டில்லிக்கு தண்ணீர் கொடுக்காமல், அணையின் அனைத்து மதகுகளையும் ஹரியானா அரசு மூடியுள்ளது. கிட்டத்தட்ட 28 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.