பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த விவகாரம்; சி.ஆர்.பி.எப்., வீரர் கைது
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த விவகாரம்; சி.ஆர்.பி.எப்., வீரர் கைது
ADDED : மே 26, 2025 02:41 PM

புதுடில்லி: இந்திய பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்டதாக, சி.ஆர்.பி.எப்., வீரரை டில்லியில் வைத்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடியாக, நம் ராணுவம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இதில், பாகிஸ்தான் ராணுவத்துக்கு கடும் சேதம் ஏற்பட்டது.
இதனிடையே, நம் நாட்டில் இருந்தபடியே சிலர், பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, உளவு வேலையில் ஈடுபட்டுள்ளோருக்கு எதிரான தேடுதல் வேட்டையை, நம் புலனாய்வு அமைப்புகள் தீவிரப்படுத்தி உள்ளன. பெண் யுடியூபர் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்திய பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்டதாக, சி.ஆர்.பி.எப்., வீரர் மோதி ராம் ஜத் என்பவர் டில்லியில் வைத்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது; கடந்த 2023ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் மோதி ராம் ஜத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். தொடர்ந்து தேச துரோக செயல்களில் ஈடுபட்ட வந்த அவர், நாட்டின் பாதுகாப்பு ரகிசயங்களை பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு கொடுத்து வந்துள்ளார். இதற்காக, பணத்தை அவர் பெற்று வந்தது தெரிய வந்துள்ளது, என தெரிவித்துள்ளது.
மோதி ராமை வரும் ஜூன் 6ம் தேதி வரையில் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ.,வுக்கு பட்டியாலா சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.