ஆயுத இறக்குமதியில் 2வது இடத்தில் இந்தியா: முதலிடத்தை பிடித்தது உக்ரைன்
ஆயுத இறக்குமதியில் 2வது இடத்தில் இந்தியா: முதலிடத்தை பிடித்தது உக்ரைன்
ADDED : ஜூன் 30, 2025 01:25 AM

புதுடில்லி: உலகளாவிய ஆயுத இறக்குமதியில் 8.3 சதவீதத்தை பெற்றுள்ள நம் நாடு, பெரிய ஆயுத இறக்குமதியாளர்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதுவரை சவுதி அரேபியா முதலிடத்தில் இருந்த நிலையில், அந்த இடத்தை உக்ரைன் கைப்பற்றியுள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில், சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 'சிப்ரி' எனப்படும், இந்த நிறுவனம், 1966 முதல் உலகளாவிய ஆயுதங்கள், ஆயுதக் குறைப்பு மற்றும் அது தொடர்பான சர்வதேச போக்குகளைக் கண்காணித்து வருகிறது. அது தொடர்பாக ஆய்வறிக்கைகளும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், 2020 - 2024 வரையிலான காலக்கட்டத்தில், உலகின் முதல் 10 பெரிய ஆயுத இறக்குமதியாளர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை சமீபத்தில் இந்த நிறுவனம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகளாவிய பெரிய ஆயுத இறக்குமதியாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மேற்காசிய நாடான சவுதி அரேபியா சரிவை சந்தித்துள்ளது. ரஷ்யாவுடன் போரை சந்தித்து வரும் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் முதலிடத்தில் உள்ளது.
இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா உள்ளது. முந்தைய 2015 - 2019 ஐந்தாண்டு காலத்தை ஒப்பிடும்போது, 9.3 சதவீதமாக இருந்தது. இந்த வீழ்ச்சிக்கு உள்நாட்டிலேயே ஆயுதங்களை வடிவமைத்து உற்பத்தி செய்யும் நம் நாட்டின் திறன் அதிகரித்து வருவதே காரணம். இதனால், வெளிநாட்டு இறக்குமதிகளை சார்ந்திருப்பது குறைந்துள்ளது.
மேற்காசிய நாடான கத்தார் மூன்றாவது இடத்திலும், சவுதி அரேபியா நான்காவது இடத்திலும் உள்ளன. நம் அண்டை நாடான பாகிஸ்தான், ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் ஐந்தாவது பெரிய நாடாக உள்ளது.
அதற்கடுத்த இடங்களில், ஜப்பான், ஆஸ்திரேலியா, எகிப்து உள்ளன. அமெரிக்கா, ஒன்பதாவது இடத்திலும், குவைத் 10வது இடத்திலும் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.