/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவிலில் ஆனி மாத கிருத்திகை விமரிசை 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
/
திருத்தணி முருகன் கோவிலில் ஆனி மாத கிருத்திகை விமரிசை 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் ஆனி மாத கிருத்திகை விமரிசை 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் ஆனி மாத கிருத்திகை விமரிசை 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ADDED : ஜூன் 23, 2025 03:03 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஆனி மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககவசம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் தேர்வீதியில் வலம் வந்தார்.
நேற்று, ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிருத்திகை விழா என்பதால், அதிகாலை 5:00 மணி முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர்வீதியில் குவிந்தனர். பொதுவழியில் ஐந்து மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டரை மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.
சில பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்தும், காவடிகள் எடுத்தும், அலகு குத்தினர்.
மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கோவில் நிர்வாகம் சார்பில், நான்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஊத்துக்கோட்டை
சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னிதியில் நேற்று, சிறப்பு பூஜை நடந்தது.
அதேபோல், ஊத்துக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள நாகவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள முருகர் சன்னிதியில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பள்ளிப்பட்டு
பள்ளிப்பட்டு அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றரம் சுப்ரமணிய சுவாமி மலைக்கோவிலில், நேற்று காலை 8:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
அதேபோல், நெடியம் கஜகிர செங்கல்வராய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், சொரக்காய்பேட்டை, பள்ளிப்பட்டு, வெங்கம்பேட்டை, ஆந்திர மாநிலம், சத்திரவாடா உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர்.