மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களை அகற்ற ஐகோர்ட் கிளை தடை
மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களை அகற்ற ஐகோர்ட் கிளை தடை
UPDATED : ஜூன் 19, 2024 12:24 PM
ADDED : ஜூன் 19, 2024 12:08 PM

மதுரை:‛‛ மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களை அங்கிருந்து அகற்றக் கூடாது '' என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு தேயிலை தோட்டங்கள் உள்ளன. பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு எடுத்து நடத்திய குத்தகை 2028 ல் நிறைவு பெறுகிறது. இருப்பினும், தற்போது ஆலையை மூட முடிவு செய்தனர். தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டங்களை அறிவித்தனர். இந்த எஸ்டேட்டை மூடுவதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரும்படி கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், மாஞ்சோலை தொழிலாளர்கள் 700 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். வீடு கட்டித் தர வேண்டும். மாற்றுப்பணி வழங்கப்படும் வரை மாதம் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, ‛‛ மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை, எஸ்டேட்டில் இருந்து அகற்றக் கூடாது. மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அவர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது '' எனவும், இந்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டும் விசாரணையை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.