அகில் சந்தித்த விபத்து ; 'லெனின்' பட சக்சஸ் மீட்டில் மனம் திறந்த நாகார்ஜுனா
தெலுங்குத் திரையுலகின் முன்னணி சீனியர் நடிகர்களான நாகார்ஜுனா மற்றும் அமலா தம்பதியினரின் மகன் அகில், இளம் நடிகராக தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைக்க முயற்சித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 'லெனின்' திரைப்படம் அவருக்குக் கை கொடுக்கும் விதமாக டீசன்ட்டான வெற்றியைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தப் படத்திற்கான சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாகார்ஜுனா பேசும்போது, மகன் அகிலுக்கு ஏற்பட்ட ஒரு விபத்து குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து அவர் பேசும்போது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்ணாடியால் அகிலின் கையில் உள்ள நரம்புகள் கடுமையாக சேதமடைந்தன. இதன் காரணமாக அவரது கையில் உணர்வே இல்லாமல் இருந்தது. கையின் செயல்பாடு மீண்டும் திரும்புமா என்கிற சந்தேகம் இருந்தது. அந்த சமயத்தில் தங்களுக்கு அது மிகுந்த மன உளைச்சலைத் தரும் கொடிய காலமாக இருந்தது. அதனால் அப்போது அதை பொதுவெளியில் நாங்கள் பகிர விரும்பவில்லை.
அதன் பிறகு இரண்டு நுண்ணிய அறுவை சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, பின்னர் ஆறு மாதங்கள் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்ட பிறகுதான் அகில் அதிலிருந்து மீண்டு வந்தார். இந்த விபத்திற்கு பிறகு அவர் மிகவும் அமைதியானவராகவும் முதிர்ச்சியுடனும் மாறியுள்ளார். அவரது சிந்தனை முறையே மாறியுள்ளது என்று நெகிழ்ச்சியாக பேசினார் நாகார்ஜுனா.